நீ பிறக்கும் முன்
அம்மாவின் வயிற்றில் இருந்த போதே,
நான் உன்னிடம் சண்டை போட ஆரம்பித்து விட்டேன்...
எப்போதாவது அம்மாவின் மடியில்
படுக்க வரும்போது,
பாப்பா வயிற்றில் தூங்குகிறாள் என்று கூறி
நான் படுப்பதை அம்மா தடுப்பாள்...
அம்மாவின் அருகில் அமர்ந்து கொண்டு
உன்னைத் திட்டுவேன்...
நீ பிறந்த பின்பும்,
உனக்குத்தான் நிறைய செல்லம் கொடுப்பாள்..
என் மீது கவனிப்பும், செல்லமும் குறைந்ததால்
விவரமறியா சிறு வயதில்,
உன்மீது எனக்கொரு சிறு பொறாமை...
கொஞ்சம் வளர்ந்த பின்
தின்பண்டங்களுக்காக இருவரும்
சண்டை போட்டுக் கொள்வோம்...
விளையாட்டுச் சாமான்களுக்காக
நாம் சண்டை போட்டுக் கொள்ளாத
நாட்களே இல்லை...
வீட்டில் ஏதாவது பொருளை உடைத்து விட்டு
இருவரும் அடுத்தவரை குறை சொல்வோம்
இருவருக்கும் பொதுவாக அடி கிடைக்கும்...
கான்வென்ட்டில் இருந்து உன்னை
தினமும் மாலையில் அழைத்து வரும்போது
உன்னை மிரட்டிக் கொண்டே வருவேன்...
பள்ளிக் கூடத்தில் சேர்ந்த பின்
சிலேட்டிலிருக்கும் உன் வீட்டுப் பாடத்தை நான் அழிப்பதும்
என் வீட்டுப் பாடத்தை நீ அழிப்பதும் தினமும் நடக்கும்...
நான் பண்ணும் அடங்களை
அம்மாவிடம் தினமும் தவறாது போட்டுக் கொடுப்பாய்,
அம்மா திட்டி விட்டு நகர்ந்ததும்
நான் உன்னை அடிப்பேன்,
தேவைக்கதிகமான சத்தத்துடன் அழுவாய் நீ...
அம்மாவுக்கு தெரியாமல் நான்
தெருவில் விளையாட போகும்போது
என்னை தைரியம் கூறி அனுப்பி விட்டு
சிஐடியாய் அம்மாவுக்கு தெரிவிப்பாய்...
அம்மாவிடம் நான் அடி வாங்குவதை
ஒளிந்து நின்று ரசிப்பாய்...
இரவு உணவாக உப்புமா சாப்பிடும் போது
சிறு பெண்ணென்று, உனக்கு
வெல்லம் அதிகமாகவே கிடைக்கும்...
என் மீது பரிதாபப் பட்டு
சிறுதுண்டொன்றை எனக்கும் கொடுப்பாய்...
தாத்தா வீட்டு ஊஞ்சலில்
யார் அதிக நேரம் ஆடுவது என்று
தினமும் போட்டி நடக்கும், உனக்கும் எனக்கும்...
நான் நகரத்திற்கு படிக்கச் சென்றவுடன்
நான் ஊருக்கு திரும்பும் போதெல்லாம்
அம்மாவுடன், நீயும் வீட்டு வாசலில் காத்துக் கொண்டிருப்பாய்..
வா என்று பாசத்துடன் அழைத்து விட்டு
வீட்டினில் நீ நுழைந்தவுடன்
திரும்பவும் ஆரம்பிக்கும், நம்மிருவருக்குமிடையே யுத்தம்...
இருவரும் வளர, வளர
இடைவெளி அதிகமானது...
செல்ல சண்டைகள் குறைந்து போனது...
இருப்பினும் குறையவில்லை பாசம்...
இப்போது உனக்கு திருமணமாகி விட்டது...
முன்புபோல் உன்னோடு சண்டையிட முடியவில்லை...
புதிதாய் கிடைத்த உன் உறவுகளோடு
நீ மகிழ்ச்சியாய் இருப்பது எனக்கும் மகிழ்ச்சியே...
இப்போதும், நீ அத்தானுடன் விடுமுறையில்
நம் வீட்டுக்கு வரும்போது
உன்னுடன் சண்டைபோட காத்துக் கொண்டிருக்கிறேன்...
ஏனெனில் சண்டைகளெல்லாம் சண்டைகளல்ல...
உனக்கும் புரிந்திருக்கும், என் தங்கையே,
உறவுகள் சிற்சிறு செல்லமான
சண்டைகளாலும் பலமடைகின்றன...
நன்றி : http://lazyguy2005.blogspot.com/2006/08/blog-post_11.html

0 comments:
Post a Comment